Saturday, July 25, 2015

சிறுதானியக் கஞ்சி

ழைகளின் உணவாகக் கருதப்பட்ட கஞ்சி, கூழ் இன்று அனைவரின் காலை உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. நோய் வரும் பாதையைத் தடுத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை.
பலன்கள்
அரிசி, கோதுமை தராத சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய, உணவாக அமைவதால் உடல் வலுபெறும். நோய் நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும்.
அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து. குடல்புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும். இளைத்த உடல் வலுவாகவும் உடல் எடை கூடவும் தினை உதவுகிறது.
வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க, தினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் (Chronic renal disease), கால் வீக்கம், முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை கைகொடுக்கும்.

பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்- டி1 நிறைந்துள்ளன. இதனால், வாய் ஓரங்களில் ஏற்படும் புண் (Angular cheilitis) குணமாகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். புரதம் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதில் அமினோ அமிலங்கள், லிசித்தின் மற்றும் மெத்யோனைன் போன்றவை அடங்கியுள்ளன.

கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அடைவதால் ஏற்படும் பெருவயிறு நோய் இருப்பவர்களுக்கு, கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது.

உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்றுநோயினைத் தவிர்க்கவும் உதவுகிறது. கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், சதைகளுக்கு ஊட்டம் கிடைக்கும். வைரல் காய்ச்சலில் குணமடைந்தவர்களுக்கு, மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனைக் குறைக்க, கேழ்வரகு பாதாம் கஞ்சி பயன்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரைமரி காம்ப்ளெக்ஸை (Primary complex) கட்டுப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செய்முறை

தினையோ, சாமையோ எதுவானாலும் மிக்ஸியில் ஒரு முறை சுற்றி, இரண்டாக உடைத்துக்கொள்ளவும். அரை டம்ளர் தானியத்துக்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக வேகவைத்து, மலர்ந்ததும் இறக்கவும். இனிப்பு வேண்டுமானால், பனை வெல்லத்தைக் காய்ச்சி, வடிகட்டி, அந்தப் பாகைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்துப் பரிமாறுங்கள். இல்லையெனில், மோர் சேர்த்து, சின்ன வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்துப் பருகலாம்.

இதற்கு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கொள்ளு எனச் சுவையான துவையல்களைத் தொட்டுக்கொள்ளலாம். தினம் ஒரு கீரைகூடச் சேர்த்துக்கொள்ளலாம். 16/07/2015

No comments:

Post a Comment