Saturday, December 20, 2014

மலட்டுத்தன்மையை போக்கும் உணவு வகைகள் :-

சோற்றுக்கற்றாழை பாயசம்
என்னென்ன தேவை?
சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் சதை பாகம் - 2 கப், பால் - 2 கப்,
பனைவெல்லம் - தேவைக்கேற்ப, முந்திரி, திராட்சை - 2 டீஸ்பூன், ஏலக்காய் - 2, நெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சோற்றுக்கற்றாழையின் இலையைக் கீறினால் உள்ளே சோறு போன்ற வெள்ளையான சதைப்பற்றான பாகம் கிடைக்கும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி, சுமார் பத்து முறை தண்ணீரில் நன்கு அலசவும். காய்ச்சிய பாலில் அதைச் சேர்த்துக் கொதிக்க விட்டு ஆறவிடவும். பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, வடிகட்டவும். பால் - கற்றாழை கலவையில் விட்டு, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.
உடல் சூட்டைத் தணிக்கும். வெள்ளைப் படுதலை சரியாக்கும். மகப்பேறு பெறும் வாய்ப்பினை அதிகரித்து, கருப்பை வளர்ச்சிக்கும் உதவும்.
அருகம்புல் புட்டு
என்னென்ன தேவை?
பச்சரிசி - 400 கிராம்,
நாட்டு சர்க்கரை - சிறிதளவு,
அருகம்புல் - 1 கட்டு,
ஏலக்காய் தூள் - சிறிது,
சுக்குத்தூள் - கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - கால் கப்.
எப்படிச் செய்வது?
அருகம்புல்லை சுத்தம் செய்து, உலர்த்தி, பொடி செய்யவும். பச்சரிசியை சிறிது நேரம் ஊற வைத்துக் காய வைத்து மாவாக அரைக்கவும். அத்துடன் அருகம்புல் பொடி, சுக்குத் தூள், ஏலக்காய் தூள் சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பிறகு அதில் நாட்டு சர்க்கரையும் தேங்காய்த் துருவலும் கலந்து பரிமாறவும். பலவீனத்தைப் போக்கி, உடலுக்கு தெம்பு தரும். நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. கருப்பை வளர்ச்சியைத் தூண்டும். கருத்தரிக்க உதவும்.
மாதுளை மணப்பாகு
என்னென்ன தேவை?
மாதுளம் பழச்சாறு - 100 மி.லி.,
பனங்கற்கண்டு - 100 கிராம்,
தண்ணீர் - 100 மி.லி.,
தேன் - 100 மி.லி.
எப்படிச் செய்வது?
எல்லா பொருள்களையும் ஒன்றாகச் சேர்க்கவும். பனங்கற்கண்டு முழுவதும் கரைந்த பிறகு, வடிகட்டி, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பாகு பதம் வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் பத்திரப்படுத்தவும். இதுதான் மாதுளை மணப்பாகு. ஒரு டேபிள்ஸ்பூன் மணப்பாகை, அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவும். ரத்த சோகைக்கு அருமையான மருந்து. கர்ப்ப கால வாந்தி, கை, கால் எரிச்சலும் சரியாகும்.

No comments:

Post a Comment